சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவருக்கு அமெரிக்கா ரூ.5 லட்சம் இழப்பீடு
சனி, 4 ஆகஸ்ட் 2012 (15:46 IST)
துபாய் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவரை சுட்டுக் கொண்ட அமெரிக்க கடற்படை அவரது குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.
கடந்த ஜூலையில் துபாய் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் பலியானார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்து முனியராஜ், மோர்பண்ணையைச் சேர்ந்த பண்டுவநாதன், முத்துக்கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க கடற்படை உயிரிழந்த சேகரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000மும் அளித்துள்ளது. இதற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உரியவரின் குடும்பங்களிடம் இன்று அளித்தார்.