தி.மு.க. பயன்படுத்தும் உதயசூரியன் சின்னத்தை சிரஞ்சீவி கட்சிக்கு ஒதுக்கியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்படும் என்று தி.மு.க. தலைமை நிலைய செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் கட்சி போட்டியிட்டது. அப்போது இரயில் என்ஜின் சின்னம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த சின்னம் ரோடு ரோலர் சின்னம் போல் இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனால் சூரியன், தள்ளுவண்டி சின்னம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பிரஜா ராஜ்ஜியம் கட்சி கோரிக்கை வைத்தது.
ஆந்திர சினிமா நடிகர் சிரஞ்சீவி கட்சிக்கு 'உதயசூரியன்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இன்று மாலை பேசுகிறேன் என்றும் அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை நிலைய செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தி.மு.க. பயன்படுத்தும் உதயசூரியன் சின்னத்தை சிரஞ்சீவிக்கு ஒதுக்கியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதுதான் ஒரே வழி என்று கூறிய இளங்கோவன், ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் தி.மு.க.வின் கிளைகள் செயல்படுகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் நிறைய குழப்பம் ஏற்படும் என்றும் அதனால் முறையீடு செய்வது குறித்து கருணாநிதியிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.