சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு செயல் அலுவலரை நியமித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (17:21 IST)
தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை நி்ர்வகிக்க தமிழக அரசு செயல் அலுவலரை (Executive Officer) நியமித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு செயல் அலுவலரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி, செயல் அலுவலர் நியமனம் செய்தது சரியே என்று தீர்ப்பளித்திருந்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமியும் மேல் முறையீடு செய்தனர். தமிழக அரசின் உத்தரவு இந்திய அரசமைப்பு பிரிவு 25, 26ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிரானது என்று தனது முறையீட்டில் சுப்ரமணிய சுவாமி கூறியிருந்தார்.
இந்த மேல் முறையீடுகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே. இரவிராஜ பாண்டியன், டி. இராஜா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, தில்லை நடராஜர் கோயிலிற்கு நிர்வாக அலுவலரை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பை ஆமோதித்து, அதற்கு எதிரான மேல் முறையீடுகளை நிராகரிப்பதாக தீர்ப்பளித்தது.
ஒரு கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தால், இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 45 (1)ன் கீழ் அந்தக் கோயிலிற்கு செயல் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு உள்ளது என்றும், எனவே செயல் அலுவலர் நியமனது செல்லும் என்றும் தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.