சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு : சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (16:09 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
WD
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு 1987ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் பிப்ரவரி 5ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன், 'சிதம்பரம் நடராஜர் கோயில் தனிப்பட்ட சமுதாயத்துக்கு சொந்தமானது. இதை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளக் கூடாது' என்று வாதாடினார்.
வழக்கு விசாரணையின் போது சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதத்தை சமர்ப்பிக்க அவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.