அமராவதி ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள தரைவழிப்பாலத்தை உயர்மட்ட பாலமாக்க ரூ.12.5 கோடி என மொத்தம் 20 கோடி ரூபாயை முதல்வர் ஜெயலலிதா இன்று ஒதுக்கியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இடையில் பள்ளிப்பாளையம் அருகில் ஓடப்பள்ளி என்னுமிடத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் இருவழிப் பாலம் அமைக்கும் பணியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணமும், கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் அமையும் வண்ணமும், கதவணைப் பாலத்தின் அகலத்தை 4.5 மீட்டரிலிருந்து 7.5 மீட்டராக அகலப்படுத்தி, சாலைப் பாலமாக மாற்றியமைக்கவும், இதற்கென நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட உள்ள பங்குத் தொகையினை 6 கோடி ரூபாயிலிருந்து 7 கோடியே 90 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, கடலூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை களையும் வகையில், மேற்படி பணிகளை விரைவாக முடிக்க ஏதுவாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 1.8 கீ.மீ நீளமுள்ள ஜவான்பவன் - கம்மியம்பேட்டை சாலையை 7 மீட்டர் அகலத்திற்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலையாக மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை மூலம் வைப்புப் பணியாக மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இச்சாலை பண்ருட்டி மற்றும் புதுச்சேரி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்றுச் சாலையாக அமையும்.
இதுதவிர, கரூர் நகரில் எற்பட்டு வரும் போக்குவரத்து வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, அதனை குறைக்கும் வகையிலும்,, வாகன விபத்தை தவிர்க்கும் வகையிலும், கரூர் மாவட்டத்தில் பசுபதிபாளையம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே, கரூர்-வாங்கல் சாலையையும், நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் சாலையையும் இணைக்கும் பழுதடைந்துள்ள தரைவழிப்பாலத்தை 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலமாக மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் சாலை போக்குவரத்து மேன்மை அடைவதுடன், இந்தப் பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எந்தவிதமான சிரமமுமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடைய வழிவகை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.