''சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்து விரோத பாடத் திட்டங்களை திணிக்கக் கூடாது'' என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
WD
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வியில் முதல்வர் ஆர்வம் காட்டும் போதே சந்தேகம் எழுந்தது. எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கவே இந்த தகிடுதத்தம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதை வரைவுத் திட்ட அளவிலேயே இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.
மக்களால் புறந்தள்ளப்பட்ட ஈ.வெ.ரா.வின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்க முதல்வர் முயல்கிறார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோற்றுப்போன நாத்திகப் புலம்பலைக் கல்வி என்ற பெயரில் மாணவர்களிடம் திணிக்க சதி செய்கின்றனர் தி.மு.க.வும் அதன் தலைவரும்.
சமச்சீர் கல்வி என்பது கல்வித் திட்டத்திலும் இருக்கும் நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பது என்ற பசப்பு வார்த்தையைக் கூறிய கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வரைவுத் திட்டத்திலேயே இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் அவலத்தை வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் வகுப்பு பாடத்தில் ஈ.வெ.ரா.வின் தாக்கம், நான்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஐந்தில் மூட நம்பிக்கை, ஆறில் கட்டுக்கதை, ஏழில் அன்னை தெரசா சேவை, சமூக அறிவியலில் இஸ்லாமியர் வருகை, எட்டில் விழாக்கள் அவசியமா? ஒன்பதில் ஆற்றுச் சமவெளி நாகரீகம். இதில் கிறிஸ்தவமும், ஜுடோயிசமும் வருகிறது. அலகு2 இடைக்காலம் நிலமானிய முறைதிருச்சபையின் பங்கு, இஸ்லாமியர் நன்கொடை, பத்தாம் வகுப்பில் ஈ.வெ.ரா.வின் விழிப்புணர்வு சிந்தனை. என்னவிதமான சமச்சீர் கல்வி இது?
மக்களை மடையர்களாய் நினைத்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள். அரசின் பிடியில் கல்வித்துறை சிக்கி சின்னாபின்னமாகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இந்த வரைவுத் திட்டத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முதல்வரின் துதிபாடிகளால் உருவாக்கப்பட்ட குப்பை வரைவுத் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தினை முறைப்படுத்த வேண்டும். பாடத்தின் முழுமையான வடிவை மக்கள் முன் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இராம கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.