சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

திங்கள், 1 ஏப்ரல் 2013 (13:10 IST)
FILE
பேருந்து மின்னணு பயணச்சீட்டுக் கருவி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து பேச அனுமதி கேட்ட மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்காததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

பேருந்து மின்னணு பயணச்சீட்டுக் கருவி வாங்கியது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. கருவிகள் வாங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பத்திரிகையில் வந்த செய்தி ஆதாரமற்றது எனவும், புகார் கூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும் கூறினார். இதனால் திமுகவினர் முழக்கமிட்டுக் கொண்டே சபாநாயகரை நோக்கி முன்னேறி வந்தனர். அமைதி காக்கும்படி சபாநாயகர் கூறியும் கேட்காததால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

மேலும் அவை நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவித்ததாக திமுக உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன் மற்றும் சிவசங்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அவர்கள் இருவரும் அவை நடவடிக்கைகளிலிருந்து 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்