சங்கரன் கோவில்: அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு

வெள்ளி, 2 மார்ச் 2012 (20:16 IST)
சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணசாமி, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால்,அதிமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால் அதிமுகவுடன் அவருக்குள்ள கூட்டணி முறிந்ததாகவே கருதப்பட்டது. இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கௌரவ பிரச்னையாக கருதப்படுகிறது.

அதே சமயம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்,சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தலித்துகளை அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க வைத்துவிடக்கூடாது என்பதற்காகவே, கிருஷ்ணசாமியை சமாதனப்படுத்தி அவரது ஆதரவை அதிமுக கோரியுள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்