கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு ரூ.118 கோடி செலவில் 3840 அடுக்குமாடி வீடுகள் கட்டவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் 2010 ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி மாநாடு நடைபெறவுள்ள ஒடிசியா வளாகம் அமைந்துள்ள சேலம் கொச்சி சாலையை இணைக்கும் கோவை இரயில் நிலையம், பேருந்து நிலையம்,
விமான நிலையம் ஆகியவற்றுக்கான சாலைகள், மாநாட்டு திடலின் அருகே தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சித்ராகுறும்பாளையம் சாலை மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கோவை மத்திய பேருந்து நிலையம், ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் இரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் சாலைகள் முதலான நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள 96 கிலோ மீட்டர் நீளமுடைய 72 சாலைகளை 59 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதே போல ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் எனும் திட்டத்தின் கீழ், உக்கடத்தில் 68 கோடி ரூபாய் செலவில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், அம்மன்குளம் என்ற இடத்தில் 50 கோடி ரூபாய் செலவில் 1608 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ரூ.118 கோடி செலவில் 3840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.