கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. 22 பெண்கள் உள்பட 106 பேர் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 7வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இடிந்தகரையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் தற்போது அணுமின் நிலையத்தில் இருந்து 300 அடி தூரத்தில் உள்ள எஸ்.எஸ்.புரம் விலக்கில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரத பந்தலும் இப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அணு மின் நிலையத்துக்கு பணிக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், பொறியாளர்கள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
மேலும் யாரும் பணிக்கு செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுமக்கள். கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தலைமையில் ஏராளமான காவலர்கள் அணுமின் நிலைய பிரதான வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளத்தை சுற்றிலும் செக்போஸ்ட் போல கற்கள், முட்களால் தடுப்புகளை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருவதால் அந்த பகுதியே பதற்றத்துடன் காணப்படுகிறது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.