கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும் எனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்பி வணங்குவோரைக் காத்தருளும் கண்ணன், தீங்கு எண்ணி தீயன செய்வோரை அழித்தொழிக்கும் ஆற்றலான்-பகவத் கீதை மூலம் வாழ்க்கை நெறியினை உலகுக்கு உணர்த்திய பார்த்தசாரதி-பாரினை காத்தருளும் பரம்பொருளின் முழு அவதாரம்-ஆழ்வார் பெருமக்கள் மட்டுமின்றி இந்து சமயப் பெருமக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இந்நாள் மகிழ்ச்சி பொங்கும் திருநாள்.
இந்த இனிய நாளில் இந்துக்கள் தங்களது சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழி நெடுக பதித்து மகிழ்ந்து கொண்டாடுவர்.
ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்களது இல்லங்களுக்கு வந்தருளியதாக பாவித்து போற்றி வணங்குவார்கள். இல்லங்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்கை திரட்டிக் கொண்டுவரும் திரு நாளான ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை எனது அருமை தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.