காவலர்கள் பாதுகாப்புடன் வெளியேறிய தங்கபாலு
புதன், 1 ஏப்ரல் 2009 (17:26 IST)
கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரி சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் அந்த மாவட்ட காங்கிரசார், அலுவலக கதவை மூடியதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் காவலர்கள் உதவியுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். ஆனாலும் காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரி கடந்த 2 நாட்களாக அந்த மாவட்ட காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திமூர்த்தி பவனை தொடர்ந்து 2வது நாளாக கன்னியாகுமரி காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று போராட்டம் நடத்திய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே தங்கபாலுவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே மாலை 4.45 மணி அளவில் தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் காவலர்கள் உதவியுடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த குமரி மாவட்ட காங்கிரசார், தி.மு.க.வின் பினாமிகளே சத்தியமூர்த்தி பவனை விட்டு வெளியேறுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தேச ஒன்றுமையை காக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வரும் வேளையில் அவர்கள் கட்சிக்குள் ஒற்றுமையை காணோம் என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டனர்.