கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை பார்த்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Ilavarasan

புதன், 14 மே 2014 (09:16 IST)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள முதலாம்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துசாமி (வயது 37). ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மல்கியா (28). இவர்கள் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்கள்.
 
இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், ஜான் ஜெபஸ்டின் (2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மல்கியாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவில் முத்துசாமி தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மாணிக்கராஜ் நைசாக முத்துசாமியின் வீட்டுக்கு வந்தார் என்றும், வீட்டின் மற்றொரு அறையில் மாணிக்கராஜும், மல்கியாவும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. முத்துசாமி அதை பார்த்துவிட்டார்.
 
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாணிக்கராஜ், மல்கியா ஆகிய 2 பேரும் சேர்ந்து, இரும்பு கம்பியால் முத்துசாமியை சரமாரியாக அடித்ததாக தெரியவருகிறது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
முத்துசாமி போதையில் தவறி விழுந்து இறந்ததாக நேற்று காலையில் மல்கியா நாடகமாடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், துணை ஆய்வாளர் ஜெயகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், மல்கியாவும், அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து முத்துசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. எனவே மல்கியாவை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட முத்துசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவாக இருக்கும் மாணிக்கராஜை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர்.
 
கொலை செய்யப்பட்ட முத்துசாமியின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கபட்டி புது காலனி ஆகும்.
 
மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்