கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது. அதே நேரத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை சரிதா 5 நாட்களாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சரிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த குழந்தை தான், கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இந்த சீசனுக்கு பலியான முதல் உயிர் என்று, நாகர்கோவில் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மற்றபடி, மாவட்டத்தில் மழை பரவலாக பெய்து வருவதால், காய்ச்சல் பரவுவதாகவும் அதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கபிலர் மலையில் 5 பேர், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.