ஒரே நாளில் 15,955 பேருக்கு அரசு வேலையும், தி.மு.க.வின் தேர்தல் வேகம்
சனி, 26 பிப்ரவரி 2011 (16:26 IST)
TNG
முதலமைச்சர் கருணாநிதி இன்று மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து செவிலியர் உள்பட 4,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதோடு சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
2006ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 6 ஆயிரத்து 810 மருத்துவர்கள்; 7 ஆயிரத்து 242 செவிலியர்கள், 1,767 கிராம சுகாதார செவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இன்றும் அதே மக்கள் நல்வாழ்வுத்துறையில் 4 பேருக்கு நியமன ஆணையை வழங்கியுள்ளார் முதலமைச்சர் கருணாநிதி.
அதோடு சென்னை தலைமைச் செயலகத்தில் மேலும் பல புதிய மருத்துவ நலத்திட்டங்களை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
(ஒன்று) சென்னை மண்டலம் சார்ந்த பகுதிகளில் கொடையாளர்களிடமிருந்து ரத்த சேகரிப்பு செய்திட, 1 கோடியே 39 இலட்ச ரூபாய்ச் செலவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய ரத்த சேமிப்பு ஊர்தியையும் அவர் தொடங்கி வைத்தார்.
(இரண்டு) அவசர மருத்துவ ஊர்தி இலவச சேவைத் திட்டத்தின்கீழ் தற்போது இயங்கிவரும் 385 மருத்துவ ஊர்திகளுடன் 5 கோடியே 96 இலட்ச ரூபாய்ச் செலவில் வாங்கப்பட்டுள்ள 31 அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவசச் சேவை விரிவாக்கத் திட்டத்தை அவர் செயல்படுத்தினார்.
(மூன்று) இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுவதால் அத்திட்டத்தின் முதல் கட்டமாக 10 இலவச அமரர் ஊர்திகளையும் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
TNG
(நான்கு) பிறந்து ஒரு வயது வரையுள்ள குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து 15 கோடி ரூபாய்ச் செலவிலான பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சைத் திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான விளக்க அட்டைகளை 10 குழந்தைகளுக்கு கருணாநிதி வழங்கினார்.
(ஐந்து) 3ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஏறத்தாழ 55 இலட்சம் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 5 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் - பள்ளி மாணவர்களுக்கான பல்பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 5 பல் மருத்துவர்களுக்கு இத்திட்டத்திற்கான கருவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
(ஆறு) ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரக் குழுக்கள் அமைத்து, 32 லட்சத்து 6 ஆயிரம் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் 10 மாவட்டங்களில் 6 கோடியே 18 இலட்சம் ரூபாய்ச் செலவில் செயல்படுத்தப்படும், மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து புதிய சுகாதார அட்டையை வழங்கி, திட்டக் கையேடு, குறுந்தகடுகளை வெளியிட்டார்.
(ஏழு) 69 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாமக்கல், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, இராமேசுவரம், திண்டிவனம், வாடிப்பட்டி, தொண்டாமுத்தூர், சூலூர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராயப்பேட்டை மருத்துவ மனை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மனநலக் காப்பகம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்தியமுறை மருத்துவமனை ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள 25 புதிய கட்டடங்களையும், சென்னை திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 5 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அரசு மருத்துவமனைக் கட்டடத்தையும் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
TNG
(எட்டு) தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின்கீழ், 48 கோடி ரூபாய்ச் செலவில் கோவை, வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளுக்குத் தேவைப்படும் கட்டடங்களுக்கும், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகத்தில் 3 கோடியே 60 இலட்சம் ரூபாய்ச் செலவில் மருந்தாளுநர் பட்டயப் பயிற்சிக் கட்டடம், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கும் முதலமைச்சர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.
(ஒன்பது) 400 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இத்துடன், 2006 ஆண்டுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 6,810 மருத்துவர்கள்; 7,242 செவிலியர்கள்; 1,767 கிராம சுகாதார செவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக நியமனம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2606 செவிலியர்களுக்கும், 804 செவிலிய உதவியாளர்களுக்கும், 463 ஆய்வகத் தொழில்நுட்பனர்களுக்கும், 57 ரேடியோகிராபர்களுக்கும், 70 மகப்பேறு உதவியாளர்களுக்கும் என மொத்தம் 4,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
TNG
இதேபோல் அரசு மானிய உதவியுடன் தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்) சுமார் 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியரல்லாத பணியிடங்களும் ஆக மொத்தம் 5,499 பணியிடங்கள் 1.6.2011 முதல் அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
அதேபோல, 1990-1991 ஆம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை, 467 சிறுபான்மையரல்லாத உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுக்கு 6,456 ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இந்த இரண்டு ஆணைகளின் பயனாக 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.
ஒரே நாளில் இன்று 15,955 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளார் முதலமைச்சர் கருணாநிதி. அதோடு பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர். இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு நியமனத்தை பார்த்ததே கிடையாது. இந்த அளவுக்கு காரணம் சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்பது தெளிவாக தெரிகிறது.