ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சனி, 17 ஜூலை 2010 (08:43 IST)
ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நடுவதற்கு அரசுத் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக 10 மரக்கன்றுகளை நடுவதற்கு அனைத்து அரசுத் துறைகளுக்கும் பொதுத்துறை செயலாளர் உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பொதுத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் 23.4.2010 அன்று உத்தரவிட்டது. மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுத்துறை செயலருக்கு பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் எழுதிய கடிதத்தை நீதிபதிகளிடம் அரசுப் பிளீடர் தாக்கல் செய்தார். அதில், மரக்கன்றுகள் நடும் விஷயம் தொடர்பாக வனத்துறை, வேளாண்மைத் துறை ஆகியவற்றை கலந்து ஆலோசித்துவிட்டு, அரசுத் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இன்னும் 6 வாரத்தில் மனுதாரர் கோரியபடி தகுந்த சுற்றறிக்கையை அரசுத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்படி இல்லாவிட்டால், மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவிட்டனர்.