ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் வங்கி லாக்கர்களில் 1 கிலோ தங்க நகைகள் சிக்கியது

சனி, 8 ஆகஸ்ட் 2009 (13:03 IST)
சென்னை துறைமுகத்தின் முன்னாள் சேர்மன் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் மீதான வழக்கில் வங்கி லாக்கர்களில் சோதனை போட்டு, மேலும் 1 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றியு‌ள்ளன‌ர்.

சென்னை துறைமுகத்தின் முன்னாள் சேர்மன் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் மீது சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் அதிகார துஷ்பிரயோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது அதிகார துஷ்பிரயோகத்தால் சென்னை துறைமுகத்துக்கு அவர் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அதிகாரி சுரேசின் வீட்டில் காவ‌‌ல்துறை‌யின‌ர் சோதனை நடத்தின‌ர்.

இந்த சோதனையின் போது ரூ.2.75 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப்பணம், சொத்து ஆவணங்களை கா‌வ‌ல்துறை‌‌யின‌ர் முதலில் கைப்பற்றின‌ர். சோதனையின் போது அதிகாரி சுரேசுக்கு 4 வங்கிகளில் லாக்கர் வசதி இருப்பதை சி.பி.ஐ. காவ‌ல்துறை‌‌யின‌ர் கண்டுபிடித்தனர்.

நேற்று 2 வங்கி லாக்கர்களில் காவ‌ல்துறை‌யின‌ர் சோதனை போட்டன‌‌ர். அதில் ஒரு லாக்கரில் மட்டும் 1 கிலோ தங்க நகைகள் இருப்பதை காவ‌ல்துறை‌யின‌ர் கண்டுபிடித்து கைப்பற்றின‌ர். மேலும் 2 லாக்கர்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிந்த பிறகு திறக்கப்படும் என்று காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

இதுவரை 4.5 கிலோ தங்க நகைகளை காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றி இருக்கிறார்கள். சுரேசின் மனைவி வித,விதமான தங்க நகைகளை வாங்கி அணிவாராம். அவர்தான் இந்த நகைகளை வாங்கி குவித்துள்ளதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

சுரேஷ் தனது சம்பள பணத்தை சில மாதங்களாக எடுக்காமல் விட்டுள்ளாராம். சம்பள பண அக்கவுண்டில் மட்டும் ரூ.3 லட்சம் வரை எடுக்கப்படாமல் உள்ளதாகவும் சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் கூறின‌ர். விசாரணை முடிந்தவுடன் சுரேஷ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரம் தெரிவித்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்