காவல்உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பிரபு, பாரதி ஆகியோர் நேற்று காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த வழக்கில் கைதான மற்ற 24 பேரும் தங்களுக்கும் இந்த நிலைமை ஏற்படுமோ என்ற அச்சத்தில் மதுரை மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குருபூஜையின்போது அவர்கள்து உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பது தொடர்பாக செல்லப்பாண்டியன் என்பவரது தரப்புக்கும், பிரபு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது செல்லப்பாண்டியனை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற பிரபுவை, காவல்துறையினர் வழிமறித்தபோது, அவர் கத்தியால் குத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரபுவும், பாரதி உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேறொரு வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பிரபும், பாரதியும் நேற்று வேனில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது நெஞ்சுவலிப்பதாக பிரபு கூறியதால், காவல்துறையினர் வேனை நிறுத்தியபோது, அந்த இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதில் சித்திரைவேல் என்கிற காவலர் உள்பட இரண்டு காவலர்கள் படுகாயமடைந்ததனர். தப்பிச்சென்ற இருவரும் தீர்த்தான்பேட்டை என்ற கிராமத்தின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது காவல்துறையினர் வந்த வாகனம் மீது, பிரபுவும், பாரதியும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.