எழும்பூரிலிருந்து நாகர்கோவில் - கோயம்புத்தூருக்கு வாராந்திர சிறப்பு இரயில்கள் இயக்கம்
சனி, 12 பிப்ரவரி 2011 (11:51 IST)
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில்- கோயம்புத்தூருக்கு வாராந்திர சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில் வரும் 16ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் 17ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் வண்டி தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் இரயில் மட்டும் மாம்பலத்திலும் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் வரும் 18ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் கோயம்புத்தூரை காலை 6.50 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் 20ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோயம்புத்தூரிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் சென்னை எழும்பூருக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வண்டி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோயம்புத்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் இரயில் மட்டும் வடக்கு கோயம்புத்தூரிலும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து சோரனூர் வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் வரும் 21ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சோரனூரை காலை 8.55 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் 22ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சோரனூரிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் சென்னை சென்டிரலுக்கு காலை 7.45 மணிக்கு வந்து சேரும்.
இந்த இரு இரயில்களும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒட்டப்பாலம் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலிருந்து சோரனூர் வரை செல்லும் வண்டி கோயம்புத்தூர் வடக்கிலும், சோரனூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வண்டி பெரம்பூரிலும் நின்று செல்லும். இந்த இரயில்களுக்கு முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.