நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2011-12ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து +1, +2 மாணவ மாணவியர்களுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நாட்டு இங்கர்சால் என்றும் தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் போற்றப்பெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15 ஆம் நாளன்று இத்திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.
ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் நன்மைகளைப் பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் அவர்களது அறிவுநுட்பமும், திறனும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.
2011-2012 ஆம் ஆண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 இலட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பன்னீர் செல்வம் கூறினார்.