இலங்கை அகதிகள் முகாம்களில் தற்பொழுது இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவிற்கும் 10000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை அகதிகள் முகாம்களில் தற்பொழுது இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவிற்கும் 10000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். இதனால் அரசுக்கு 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடியே 33 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்;
முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுதுபார்த்தல், சாலைகளை சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், ரேஷன் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு அமைத்தல்,
சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளுக்காக 20 கோடியே 66 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.