இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் விரட்டியடிப்பு!

திங்கள், 18 ஜூன் 2012 (11:48 IST)
நடுக்கடலில் துப்பாக்கியைக் காட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளது இலங்கை கடற்படை.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம் மிகுந்த கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது சூறாவளி காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டினர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

கரை திரும்பிய மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் தொடர்ந்து விரட்டியடித்து வருகிறார்கள். இதனை மத்திய-மாநில அரசுகளும் கண்டுகொள்ளாமல் உள்ளது என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்