நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது என்று ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆசிரியராகப் பணிபுரிந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து
என்பது வள்ளுவன் வாக்கு. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவர் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.
நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது.
ஆசிரியர் தினமான இந்நாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியைப் பாராட்டி சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை அரசு வழங்குகிறது. இக்கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.
தமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நின்று, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.