ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் 1000 ரூபாய் - ஜெயலலிதா
புதன், 1 ஆகஸ்ட் 2012 (12:07 IST)
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திரு நங்கையர்களின் நலனுக்காக "ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்'' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.