ஆசிட் வீச்சுக்கு ஆளான வினோதினி மரணம்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (09:56 IST)
FILE
திராவக வீச்சுக்கு ஆளான விநோதினி காலை மரணமடைந்தார். அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

புது‌ச்சே‌ரி மாநிலம், காரைக்கால், புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோதினி (23). பி.டெக் முடித்து விட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

வினோதினி கடந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். தீபாவளியை கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும்போது, காரைக்காலில் வைத்து அவரை ஒருதலையாக காதலித்த திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வினோதினி மீது ஆசிட் ஊற்றினார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த வினோதினி தற்போது, கண் பார்வை இழந்த நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌யில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் வினோதினிக்கு கடந்த 2 நாட்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று மாலை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவ்க்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்