அண்ணா பல்கலை முன்பு நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சனி, 5 டிசம்பர் 2009 (14:59 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காக நாளை முதல் அவ்வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்தார் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மற்றும் பாதசாரிகளின் நலன் கருதியும் புதிய போக்குவரத்து திட்டத்தை நாளை முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகின்றது.
அதன்படி காந்தி மண்டபம் சந்திப்பிலிருந்து சர்தார் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வலது புறம் வாகனங்கள் திரும்புவது தடை செய்யப்பட்டு, நேராக சர்தார் பட்டேல் சாலையிலேயே சென்று ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் முன்பாக யூ வளைவு எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தை அடையலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.