அண்ணா பிறந்தநாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ
சனி, 3 செப்டம்பர் 2011 (16:30 IST)
பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை அண்ணா பிறந்தநாளில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர் 10 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப்பிரிவுகளில் தண்டனை பெற்றதை காரணம் காட்டி விடுவிக்கப்படாமலேயே சிறையில் உள்ளனர்.
பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சிறையில் இருந்து வாடுகின்றனர். அதனால் அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர்.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், இந்திய நாடாளுமன்றத்தில் வந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் நான் உரை ஆற்றினேன்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தத்தில், அதனை எதிர்த்து கருத்துச் சொன்னது நான் மட்டுமே. குற்றப்பிரிவுகளை காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா வருகிறது. அதையொட்டி, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுவிக்கப்பட வேண்டும். பரோல் விடுப்பில் சென்று குறிப்பிட்ட நாளில் திரும்பாதவர்களுக்கு ஒருநாள் இருநாள் தாமதமாகிவிட்டது என்று காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.