அண்ணனை காதலித்த தங்கை; கண்டித்தவர் கொலை

சனி, 21 செப்டம்பர் 2013 (18:13 IST)
FILE
வேதாரண்யத்தில் அண்ணன் முறை உள்ளவரை காதலித்த பெண்ணை கண்டித்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், சர்வோதய புரத்தைச்சேர்ந்த அப்பாக் குட்டி என்பவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 38) விவசாயி. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

மலர்கொடியின் அண்ணன் பக்கிரிசாமி என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் சுபாஷினி (22), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சுபாஷினியின் உறவினரும் அண்ணன் முறை கொண்டவருமான அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (26) சுபாஷினியை மோட்டார் சைக்கிளில் கடைக்கு அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரவிச்சந்திரனின் மகன் சங்கர் தனது தந்தையிடம் சுபாஷினி சுந்தர்ராஜனுடன் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி சென்று வருவதாக கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் அண்ணன்-தங்கை முறை கொண்ட அவர்கள் காதலிப்பதாக ரவிச்சந்திரன் கருதினார். எனவே அவர் சுந்தர்ராஜனை கண்டித்தார். இருந்த போதிலும் சுபாஷினியுடன் சுந்தர்ராஜன் பழகி வந்தார்.

இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் நேற்று ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி சுந்தர்ராஜனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த பஞ்சாயத்து முடிந்து மோட்டார் சைக்கிளில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது சுந்தர்ராஜனும், அவரது நண்பர் தனகோடி(20) என்பவரும் அவரை வழிமறித்து தகராறு செய்தனர்.

சுந்தர்ராஜன் தன்னை பஞ்சாயத்துக்கு இழுத்து அவமானப்படுத்தியதாக கூறி ரவிச்சந்திரனை திட்டினார். அப்போது தனகோடி உருட்டுக்கட்டையால் ரவிச் சந்திரனை அடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சுந்தர்ராஜன் கத்தியால் ரவிச்சந்திரனை குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ரவிச்சந்திரன் தாக்கியதில் காயமடைந்த தனகோடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் அதிவீர ராமபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தனகோடியை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட சுந்தர்ராஜனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்