வரு‌ம் 20ஆ‌ம் தே‌தி முத‌‌ல் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி விண்ணப்பம் விநியோகம்

திங்கள், 18 மே 2009 (17:19 IST)
ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரு‌ம் 20ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30 மையங்களிலும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது.

வரும் 2009-10ஆம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உதவி பெறும், உதவி பெறாத தனியார் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையினர் அல்லாதோர் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கும், ஆங்கிலோ இந்திய ஆசிரியர் பட்டய பயிற்சிக்கும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒற்றை சாளர முறையில் தேர்ந்தெடுப்பதற்காக விநியோகம் செய்யப்படுகிறது.

அரசு நிறுவனங்களில் அனைத்து சேர்க்கை இடங்களுக்கும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அல்லாத நிறுவனங்களில் 60 சதவீதம் இடங்களுக்கும், அரசு உதவி பெறும் சிறுபான்மை நிறுவனங்களில் 50 சதவீத இடங்களுக்கும் அரசு உதவி பெறாத தனியார் சுய நிதி நிறுவனங்களில் விதிகளின்படி அவை தாமாக முன்வந்து சரண் செய்யும் சேர்க்கை இடங்களுக்கும் ஒற்றை சாளர முறைப்படி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேல்நிலை தேர்தலில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30 மையங்களிலும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது.

விண்ணப்பம் பெற ரூ.500ம், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினர் ரூ.250க்கும் 'டி.டி' எடுத்து நிறுவன முதல்வரிடம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்