சங்கத்தில் இருந்து நடிகை ரஞ்சிதா நீக்கமா? சரத்குமார் பதில்
சனி, 13 மார்ச் 2010 (09:11 IST)
''நடிகை ரஞ்சிதாவின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது'' என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாமியாருடன் ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.
சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சனையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு? என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.
ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.
நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் நடந்தது வேறு. அவருடன் இணைத்து சில நடிகைகளின் படங்களை பிரசுரம் செய்ததால், அந்த பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிட்டது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது.
நடிகர்கள் வடிவேலு-சிங்கமுத்து இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபோது, நடிகர் சங்கம் தலையிட்டது. ஆனால், அவர்கள் இருவருமே நீதிமன்றத்திற்கு போய்விட்டார்கள். நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது என்று சரத்குமார் கூறினார்.