சேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகருக்கு அரிவால் வெட்டு

சனி, 15 மார்ச் 2014 (16:49 IST)
சேலத்தில் நான்கு ரோடு பகுதியில் திமுக பிரமுகர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஹரிபுத்திரன் மகன் வெற்றிவேல் (42). சின்னப்புதூர் அழகாபுரத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுகவிலும் கட்சிப் பணியாற்றி வருகிறார்.

சனிக்கிழமை காலை சகோதரி மாதேஸ்வரியுடன், காரில் மீன் வாங்க கடைக்கு வந்தார். மீன் கடையில் வெற்றிவேல் மீன்வாங்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த மர்ம நபர் திடீரென வெற்றி வேலை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டினால் காயமடைந்த அவர், அலறி துடித்து கீழே விழுந்தார்.

அரிவாளால் வெட்டியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். வெற்றிவேல் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்