கேரளா அனுமதிக்காததால் முட்டை- கறிக்கோழி விலை வீழ்ச்சி
திங்கள், 5 நவம்பர் 2012 (13:25 IST)
தமிழகத்தில் இருந்து முட்டை, கோழிகளை கேரளா அரசு அனுமதிக்காததால் அதன் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில் இருந்து முட்டை, கறிக்கோழிகளை கேரளா அரசு அனுமதிக்கவில்லை. 8வது நாளான இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 6 கோடி முட்டைகள் தேங்கியதால் நஷ்டத்தை சமாளிக்க நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் வட மாநிலங்களுக்கு முட்டைகளை அனுப்புகிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்பதற்கான ஆவணங்களை கேரள அரசு கேட்டது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கொடுத்து உள்ளோம். இன்று அதில் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.
முட்டை, கறிக்கோழி தேக்கம் காரணமாக நாமக்கல்லில் விலைகள் குறைந்தன. சில்லரை விலையில் கடைகளில் முட்டை ஒன்றுக்கு ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சில முட்டை உற்பத்தியாளர்கள் வட மாநிலங்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை அனுப்பி வருவதாக கூறப் படுகிறது.
நாமக்கல்லில் முன்பு உரித்த கோழி ரூ.130 வரையும், உரிக்காத கோழி ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது உரித்த கறிக்கோழி ரூ90-க்கும், இறகுகளுடன் உள்ள உரிக்காத கறிக்கோழி ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சேலத்தில் மட்டும் கறிக்கோழி ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் விலையை குறைக்க வில்லை.