தை முதல் நாள் பொங்கல் விழாவாக, தமிழர் திருநாளாக, சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடுகிறோம். சாதி, சமயம் அற்ற வகையில் தமிழ்நாட்டில் எல்லோரும் கொண்டாடி மகிழும் விழாவாக பொங்கல் அமைகிறது.
பொங்கல் விழா, தமிழர்களின் அடையாள விழா. அறுவடை விழா, தேசிய ஒருமைப்பாட்டு விழா. இதை குறுகிய அளவில் இல்லாமல் பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டும். கடமைக்காக கொண்டாடமல், பண்பாட்டு பழமை மாறாமல் உணர்வுடன் கொண்டாடப்பட வேண்டும்.
நெல்லுக்கும், நீருக்கும் விழா எடுக்கும்போதெல்லாம், இந்த விழா கொண்டாடப்பட வேண்டும். பொங்கலுக்கு முந்தைய நாள் புது மண்பானையை கழுவி அதில் நிறைய நீர் ஊற்றி வைக்க வேண்டும். அப்படி செய்தால் மண்பானை அந்த நீரில் சிறிதளவை உறிஞ்சிவிடும். அதனால் பானை சற்று உறுதியாகிவிடும். பொங்கல் வைக்க தயாராகிவிடும்.
அதுமட்டுமல்ல, வெங்கலப்பானை போல அல்ல மண்பானை. முற்றத்தில் அடுப்பு கூட்டி, அதில் பொங்கலிடும்போது, மண்பானையை அடுப்பில் வைக்கும்போது பொறுமையாக வைக்கவேண்டும். இல்லாவிடில் அது உடைந்துவிடும். இது எதற்காக என்றால் பெண்மைக்கு பொறுமை தேவை என்பதற்காகத்தான். தமிழர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் அர்த்தம் உண்டு. நன்மையும் உண்டு.