பூமித் தாயின் நிரந்தரக் கருணாயல் நிலத்தில் நின்ற ஈரத்தை நம்பி ஆழ உழுது நாற்று நட்டு முளைத்தெழும் வேளையில் பெய்தது மழை
உலகத்தை முன்னேற்றிய தொழில்களும் தொழிற்சாலைகளும் விட்ட சுவாசத்தால் காற்று மண்டலம் மாசடைந்துப் போய் புவியின் வெப்பநிலை உயர்ந்துள்ளதாம்
அதனால் ஏற்பட்ட பருவ பாதிப்பு பருவம் தவறிய பருவ மழையாகி விவசாயியின் வாழ்வில் வந்து விடிந்து பொய்த்துப் பிறகு கொட்டித் தீர்த்தது
தொழில்நுட்பம் விட்ட மூச்சுக் காற்றில் உன் மடியில் தவழும் விவசாயம் மூச்சுத் திணறி விழி பிதுங்கிக்கிடக்க வேண்டாத நேரத்தில் பெய்தது மழை
கதிர் பூத்து முற்றும் வேளையில் காற்றையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு அழிப்பேன் என்று அடாது பெய்த மழையால் விளைந்த நெற்கதிர் தள்ளாடியது வெள்ளநீரில்
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி உலகிற்கு இளைத்தவன் விவசாயி தானோ உன் உறவு உன் சுற்றம் நாங்கள் காப்பாற்றி கரையேற்றித் தேற்றிடுவாய்த் தாயே
துணிந்து செய்த நிலைமாறி விவசாயம் இன்று பயந்து செய்யும் தொழிலானது சோற்றுக்கும் பாட்டுக்கும் கவலையற்ற நிலைமாறி இன்று மிரட்சியில் உழல்கிறது விவசாயி வாழ்க்கை
குல தெய்வங்களுக்கு கிடா வெட்டி காவல் தெய்வங்களுக்கு காவடி எடுத்து கோயில் தெய்வங்களுக்கு விழா கொண்டாடி பூமியை நம்பி வாழ்ந்திடும் மக்கள் நாங்கள்
வெள்ளத்தில் இருந்து ஈரப்பதத்துடன் பிடுங்கிய நெல்லை சீராக்கி அரிசியெடுத்து சூரியனை நோக்கிப் பொங்கலிட்டு படைக்கின்றோம் உன் அருள் வேண்டி
சர்க்காரும் நிர்வாகமும் கூடநிற்காத எங்களுக்கு நீ மட்டும்தான் தாயே இயற்கை அன்னையே என்றென்றும் எங்களின் மானம் காக்கும் வேட்டி அண்ணாந்து கும்பிடுகிறோம் நின்னருள் வேண்டி
நெல்லையும் எள்ளையும் விதைப்பதன்றி வேறெதையும் விதைத்தறியாத எங்களுக்கு புல் பூண்டு உயிரற்றுப் போகும் பூமியில் போவதற்கு வாழ்வெங்கே கூறிடு தாயே
அருள் செய்வாய் தைத்திருநாள் இன்று பிறக்கட்டும் எமது வாழ்விலும் புது வாழ்வு!