எழுந்து வா எங்கள் தலைவா!

சனி, 28 ஜூலை 2018 (13:17 IST)
உன் மடி; உன் விழி ; 
உன்  தோள் ; உன் மொழி ; 
உன் நினைவு ; உன் சுவாசம் என
உன்  உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்கள்   
வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறார்கள்
எழுந்து வா எங்கள் தலைவா !
 
உன் விரலுக்கும், தமிழுக்கும் என்ன சண்டையா ? 
தாளா முடியாதத்  தவிப்பில் உன் செம்மொழி
எழுந்து வா எங்கள் தலைவா !
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு 
அந்த பாதையில் மரணம் இல்லை 
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ படிக்காதவன் தான் என் தகப்பன்னைப் போல ! 
என்னை படிக்க வைத்தவன் !
எனக்குப் பிறகு என் குடும்பம் மொத்தமும் பட்டதாரிகள் !
என் சகோதரிகளின் பெண் பிள்ளைகளை 
படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறாய் !
பட்டம் பெற அழைக்கிறோம் 
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ  தூசி அல்ல ! பறந்துப்   போவதற்கு
நீ  துகள் அல்ல ! துவண்டுப்   போவதற்கு
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத 
எப்போதும் பிரகாசிக்கும் ஆதவன் நீ !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
சமூக நீதிக்கான உன் பாதையில் தான் 
எத்தனை கரு நாகங்கள் !   
பேய்களுடனும்  பிசாசுகளுடனும் நீ களம் ஆடிய  போர்களம் அது !
உன் சமத்துவபுரங்கள் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
தெள்ளுத்தமிழில் கவிப்பாட !
உன் துள்ளுத்தமிழ் உரை கேட்க !
உன்  தொல்காப்பியர் பூங்கா அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ நாத்திகன் தான் !
மண் சோறும் இல்லை 
பால் குடங்கள் இல்லை 
தீ சட்டிகள் இல்லை 
தீ மிதித்தல் இல்லை
திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிய தேர் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
கடை மடைத் தொட்ட  காவேரியைக்  காண !
நீ பிறந்த மண் திருக்குவளைக் காண !
செந்தமிழே !
செம்மொழியே !  
சாயாத புகழே !
சிங்க குரலே !
அண்ணாவின் இதயமே ! 
திராவிட நூலகமே !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
 
 
இரா. காஜா பந்தா நவாஸ்
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்