26.3.1960 - ல் செட்டிகுளத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் தமிழ்செல்வன் இலங்கையின் வசித்து வந்த இவர் குடும்ப மற்றும் அரசியல் பின்புலங்களால் மனம் கசந்து 1983 ல் நாட்டை விட்டு வெளியேறியவர். தற்போது கனடாவில் வசிக்கிறார்.
`முடிவிலும் அழியாதது' என்ற கவிதைத்தொகுப்பு இவரது மூன்றாவது தொகுப்பாகும்.
நன்றி : முடிவிலும் அழியாதது
கவிதைத் தொகுப்பு
வெளியீடு : `நீலமலர்' (1988)
மோதல்
இருள் நிலங்களினூடே பயணம் கிளைகளின் இருப்பை உணர்த்தி ஓடும் அடிமரங்கள் துருவிச் சலித்தன கண்கள்.
காலடிக்கு இறங்கி வந்த முகில்களுடன் பேசிக்கொள்ள ஏது பொழுது? `வாழ்க்கையைப் பிரிந்தோம்' எனும் சோகம் வந்து மோதிற்று நெஞ்சில்.
மோதிப் பிரிந்த அலைகளுடன் அந்த இரவில் மட்டும் போயிற்று கவலைகள்.
நிலாவைப் பார்த்தபடி பாறை மீதிருக்க ஏது பொழுது? `வாழ்க்கையைப் பிரிந்தோம்' எனும் சோகம் வந்து மோதிற்று பின்னர்.
தசை உன்னில் இருந்து என் தசை பிரிந்ததும் இரத்தம் கசிந்தது என்னுள்.
நினைவுகளை நசுக்கிவிட நாட்களாலும் முடியவில்லை பிரிவில் துலங்கியது பரஸ்பர அன்பு.
எனினும் கோபங்களில் அது எங்கோ பதுங்கிக் கொண்டதும் உண்மை தானே.
வார்த்தை நகங்களால் கீறிக் கொண்ட இதயங்களுக்கு எத்தனை முறை ஒத்தடம் கொடுப்பது சொல்.
ஆனாலும் பிரிக்கப்பட்ட தசைகளில் இருந்தும் இரத்தமாய் கசிகிறது அன்பு.
கவிதைகள் : ஹம்சத்வனி நட்பு
உலர்ந்த பாறைகளின் இடுக்குகளெல்லாம் வாழ்க்கை துளிர்த்திருந்தது.
ஒவ்வொரு தளிரும் உயிர்த்திருக்க மனமெல்லாம் ஒளி வெள்ளம்.
அழிவில் இருந்தும் துளிர்ப்பதற்கான முனைவு மொட்டு விட்டது என்னுள்.
பரந்தது போலும் கடல் பாடுவன போலும் நதி வானும் நீள நீள நட்சத்திரங்கள் துலங்கிய இரவில் நிலா என் கைகளில்.
இலகுவாதல் என் நாளங்களுள் புகுந்து அணுக்களில் சில்லிட்டது புல்லாங்குழல்.
ஆத்ம ஒலி ஆர்த்தெழுந்து ஆரத் தழுவிற்று உள்ளும் புறமும்.
காலத்தில் கரைகின்ற வாழ்வைப் போல காற்றில் கரைந்தது.
குடிபெயர்ந்து நிலமும் பெயர்ந்து வெளி என்றாகிய பின் விதிகள் தொலைந்தன.
பாறாங் கல்லென உயிர்த்துக் கிடக்கும் நினைவுகளை நெம்பித் தள்ளுவதையும் அகத்தின் சிடுக்குகளை அவிழ்ப்பதையும் தவிர புறத்தின் உறவுகள் எல்லாம் எளிதாயிற்று.
எவ்வாறாயினும் ஒவ்வொரு முறை பிரசாத்தின் புல்லாங்குழல் என் நாளங்களினுள் புகும் போதெல்லாம் நான் என்பது அழிந்தழிந்து புனிதமாகிறது.
கவிதைகள் : ஹம்சத்வனி
தொலைத்தல்
எல்லா நம்பிக்கைகளும் தொலைந்து விடுமோ என்ற பயம் நெருங்கி வரலாயிற்று. மேலும் மேலும் குரூரமாய் மாறுகின்ற சூழலை இந்த சூரியன் எப்படித்தான் அழகாக்குகிறான் என்பது மட்டும் புரியவே இல்லை. வெண்பனிப் புகாரின் குளிர்ச்சி காதை விறைப்படையச் செய்கிறது. வெண்பனியிலும் நிரவிப் பரவும் கருமையிலும் அந்த மலை மறைந்து போயிற்று. தனிமையில் ஆழ்கையில் அர்த்தங்கள் வெளிச்சமாயின. நான், அவள், அவளுக்குண்டான வேறு வேறு முகங்கள் நகங்கள் முளைத்த வார்த்தைகள் அவற்றுள் சில. அழுவதற்கும் திராணியற்று விக்கித்து நிற்கும் மக்களுடைய கனவுகளைப் போல என்னுள்ளும் குதறப்பட்டன நம்பிக்கைள். அந்த இரவில் அறைக்குத் திரும்புகையில் பார்த்தேன் எனக்கும் மூன்று நிழல்கள்.
காற்று
விரகதாபமிக்க காற்று என் மீது மோதுகையில் நீ பிரசன்னமாகிறாய். சின்ன ஜன்னல்களுள்ள எங்களின் அறைகள் தகர்ந்து போய்விட்டதை நீ அறிவாய். அந்த ஆலமர நிழலும் வயல் வெளியும் உவப்புடையதாய் இல்லை. குறிகளை இழந்து முண்டங்களாய் அலைகின்றனர் மாந்தர் மண்டையோடுகளுக்குள் நாறுகிறது மனிதத்துவம். உன் கருவறையில் உயிர்கொள்ள எந்த ஆண்மகனின் விந்தணுக்கள் வந்து சேரப் போகின்றன. முண்டங்களாய் அலைபவர் போக எஞ்சியோர் அலிகளாயினர். ஆகையினால் நீ காற்றைப் புணர்ந்து கருத்தரி. இருப்பின் சுதந்திரமும் ஆண்மையும் கொண்டது காற்று.
அழும் குரல் காற்றில் சிணுங்கும் இலைகள் கனவுகளைத் துயிலெழுப்பும். மழை ஓய்ந்த ஈரத்தில் அந்தக் குழந்தையின் அழுகுரல் தவழ்ந்து வரும். கண்ணாடியில் தங்கிய நீர்த்துளி வைரமாய் ஜொலிக்கும் என் இளைய நாட்களைப் போல. கரை கடக்க முற்படும்போதெல்லாம் புயலில் சிக்க வைத்து திரும்பவும் தீவுகளில் தள்ளி விடுகிறது - வாழ்க்கை. என் சொந்தங்களையெல்லாம் சிதற அடித்துவிட்டது இரக்கமில்லாக் காலம்.
உள்ளும் வெளியும்
காற்று போன்றது வாழ்க்கை புதிதாய் எதனையும் சொல்லத் தவறிய புத்தகம் போல் பொழுதுகள். அறைச்சிறையில் நான். அவள் விரல்களின் ஸ்பரிச ஆவிகள் வளைய வர மனதைப் பிளந்திறங்கின வேதனைகள். வெளியில் - பகலில் தெரியும் பாதி நிலவு வெய்யிலோடு மழை கருமுகில் விலக ஒளிர்ந்தும் மறைக்க மறைந்தும் இருப்பை உணர்த்தும் சூரியன். தொலை தூரத்திலிருக்கும் தங்கையின் குரல் தொலைபேசியில் என்னை அழைக்கும். உள்ளிருந்து தினமும்தான் வெளி வருகிறேன். ஆனாலும் வாழ்க்கைதான் காற்று போல...
சுவாசம்
அறுந்து துடித்து இறந்தாலும் பல்லி வாலாய் மீண்டும் வளரும் நம்பிக்கைகள். தேடு என்று குரல் கொடுத்தாலும் முகம் காட்டாது ஒளிந்து கொள்ளும் வெளி. ஆவல் பொங்கியெழ அழைத்தாலும் கரையில் நெம்பித் தள்ளும் கடல். எதிர்பார்ப்புகளும் வாழ்வும் முரண்டிக் கொண்டாலும் கற்றுத் தரும் வாழ்வின்முன் மண்டியிட்டுக் காத்திருப்பேன். மரணத்தை சுவாசிக்கும் வரையிலும் காற்றின் தோழமையில் மகிழ்ந்திருப்பேன்.