[கவிஞர் ச.விசயலட்சுமி தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர். முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர். "பெருவெளிப்பெண்" கவிதைத் தொகுதி இவரது முதல் தொகுதி. இந்த தொகுதியிலிருந்து சில கவிதைகளை வழங்குகிறோம்]
இருப்பு
உங்களுக்கு சாத்தியமாகிறது நண்பனின் வீடு செல்வதும் உரையாடுவதும் நட்பையே சுற்றமாய் வரித்துக் கொள்வதும்
இருப்பினும் சுதந்திரக் காற்றின் போதாமை அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது.
எங்களை ஒப்பிட்டு உங்களைப் பாவம் எனும் போக்கு மிகச் சிறந்த அங்கதம்
அவ்வப்போது கேட்பதுண்டு என்னகுறை உமக்கென? சரிதான்.
என்றேனும் அருகாமையிலிருக்கும்
நெருங்கிய நட்பின் இறுதி அஞ்சலியில் பங்கேற்காமல் போனதுண்டா?
ஒரு முறை தவிர்த்துப் பாருங்கள் உணர்வீர்கள் எங்கள் இருப்பை