வெட்ட வெளியில் சுட்டு எரிக்கும் உச்சி வெயிலில் கட்டி சேரடிக்க தன்னோடு உழைத்த காளைகளை தீவனம் தண்ணீர் காட்டாமல் உணவு கொள்வதில்லை உழவனவன்
சமையற்கட்டை சுற்றி விட்டு அரிசி நொய்போட்டு வளர்த்த கோழி இட்ட முட்டைகள் பொறித்த குஞ்சுகளை வளர்த்து விற்று வயிற்றைக் கழுவினாலும் அடித்து உண்பதில்லை அவைகளை வளர்த்தவன்
தான் வாழ்ந்த விசால வனத்தை அண்டி அழித்து நிலம் சமைத்து வாழ்ந்தாலும் பழிகொண்டு தாக்குவதில்லை விலங்குகள் ஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்க மனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்றன
ஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானுட வரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம் விழிபிதுங்க யோசித்தாலும் புரியவில்லை ஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம் அவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்று
உழைத்தவன் வியர்வை உலர்வதற்குள் அவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்த ஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்டு அவர் சொல்லை ஏன் மறந்தாரென்பதை சிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை
தோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும் வேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும் ஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான் உரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பதை ஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம்
மாணவர் படிக்கும் வரலாறு எல்லாம் சோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தானே மண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தானே மனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியது உன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம் அன்றோ.