Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
மரத்தைப்பார்.
கண்ணாடியைக் கழற்று,
பீழையைத் தூசியை அகற்று,
மரத்தைப் பார்.
மரத்தை மனமாகவோ மனத்தை மரமாகவோ
அல்ல,
மரத்தை மரமாகவே.
விஞ்ஞானி வியாபாரியாக அல்ல,
மரத்தை மரமாகவே
மரத்தை மரம் பார்த்தாற்போல்,
மரத்தை மரத்துப்
பார்.
கோவில், காவல் மரங்களாக அல்ல.
`சொல்லாமல் செய்யும் பெரியார் பலா,
சொல்லிச் செய்யும் சிறியர் மா,
சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி` -
அந்த ஒளவையார் மரத்தைப் பார்க்கவில்லை.
பழுமரம் வள்ளலாம
நெடுமரம் முட்டாளாம்.
தனிமரம் துறவியாம்.
கூட்டுமரம் வம்சமாம்.
தேக்கு, சந்தனம், மூங்கில்
வல்லவன், தியாகி, சந்தர்ப்பவாதியாம்.
மரத்தில் மானுடத்தின் இலக்கியத்தைப்
பார்ப்பது பார்ப்பதே அல்ல
மரமை, மரத்துவம்
பா - மரத்தில் இல்லை,
பாமரத்தோடு பார்ப்பதில்தான்.
மறதி
அறிமடமை
காட்சி
மரம்.