செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே; வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள் மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல் மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்`` எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில் எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்!
காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர் காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல் ராணியினை. தாழும் தீக் கணகணப்பில், ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம் விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்! ஊன்கலந்தோம்! உயிர்கலந்தோம்! ஒரே ஓர் ஓட்டின் உள்ளிருக்கும் வெண் மஞ்சள் கருவே ஆனோம்!
அன்றெனக்கு அவள் சொன்ன சோக, கோப ஆவேச நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டே முன்நிற்கும் சிறுமிகளை ஒவ்வொன்றாக முனைந்து முகம் நோக்குகின்றேன். அவளும் ஓர்கால் சின்னதிலே இவர்போல்தான் இருந்திட்டாளோ!- (தெய்வீகக் குழந்தைக்கும் மானுடத்தின் பண்பு சில இருக்கலாமே.) அந்தோ! விந்தை! பாழுமனம் வெறியேற அவளே:! மெய்யாய்!
அவளுடைய இன்றை உரு அகம் அலைத்து அலைகளிடை வீனெஸென உதிக்கும்! ஈதோ குவாற்றசென்ட்டோ, நிழல் சாதத்தையும் காற்றுக் குளிகையையும் அருந்தியதைப் போல் குழிந்தும் கவின் பொதிந்த கதுப்பினாளைச் சித்தரிக்க கைத்திறமும்? வாலிபத்தில் நானும் வீனஸ் தவப்புதல்வன் போல அழகன் இல்லை, ஆனால் தற்பொழுது போல் கொல்லைப் பொம்மை இல்லை.
எந்த இளம் அனன்னைதான் அறுபதுக்கும் எஞ்சும் பனிப்பருவங்கள் தலைசுமக்கும் மைந்தனது விகாரஉரு முன்னே நோக்கின், மடிவீழ்ந்து மடுஆழ்ந்து மடைதிறந்து இந்திரியத் தேன்துளிர்த்து விலகி விட்டோன் இதயமில்லாத் துரோகத்தை ஈடாய் ஏற்பாள், ஐந்திரண்டு மாதங்கள் ஏந்தி, ஈன்று அல்பகலாய்ப் புறம்தந்த வேதனைக்கு?
மன்னாதி மன்னனான மகா அலெக்சை மணிப்பிரம்பால் கச்சைத்தோல் வராமல் குந்து பின்புறத்தில் மத்தளம்போல் அடித்தான், தர்க்கம் பிறப்பித்த அரிஸ்டாட்டில்! கணிதம், கான எண், ஜென்மப் பன்மை இயல், விண்மீன் மாய இசை, அப்பாலோ அவதாரப் பொற்றொடைகள் இன்னபிற கொண்டகில உலகம் எங்கும் இணைமிகை அற்றிருந்தவன்தான் பித்த கோரஸ்!
இயற்கை உலகாயுதத்துப் பிரத்தியட்ச எதார்த்தங்கள், பைசாச இலட்சியத்தின் சுயமூல இலக்கணத்துச் சாரங்கள் மேல் சுழன்றோடும் நுரைக்கோலம் என்றான் ப்ளேட்டோ! பெயர் பெற்ற எத்தனைபேர் இன்னும் உள்ளார்! பிரமாத அமரர்கள்! ஞானியர்கள்! பயிர்கொத்தும் பறவைகளை வெருட்டி ஓட்ட பழங்குச்சிகள் போர்த்த பழங்கந்தல்கள்!
அன்னையர், கன்னிகையர் இருசாராரும் அவர் அவர்கள் வடிவுகளை வணங்குகின்றார்! வெண்கலத்தில், இனப்பளிங்குக் கல்லில், வர்த்தி விளக்கால் மேல் ஓங்கி ஒளிர் உருக்கள், மூப்பால் நன்மக்கள் போல் விகாரம் அடைந்து பெண்மை நளினமனம் உடைப்பதுபோல் உடைத்தே தீரும்! தாய்மையின், கன்னிமையின் பேறே! வீடே!