செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:16 IST)
குழிக்குள் சவம்
குனிந்து பார்த்தேன்
கெக்கலிட்டது
பிணம்:
எனக்காவது
இந்த இடம்
உனக்கு?
ஆழத்திற்கும்
ஆழத்திலிருந்து
இன்னொரு குரல்
"என் மீது
யார் படுத்திருப்பதையும்
அனுமதிக்க முடியாது"
அச்சத்தில்
அவசரமாய்
நிமிர்ந்தேன்
சுடலையின் சாலையில்
மகன்களின் கொள்ளிச் சட்டிகளோடும்
கொள்ளுப் பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
இன்னும் சில பிணங்கள்.
நிறுத்தப்பட்ட எல்லையிலேயே
அழவேண்டுமே என்கிற
துக்க கூட்டத்தில்
சில கர்ப்பிணிகளும்.
பிதுங்கி வழிகின்றன
பிணக்கிடங்குகளும்
தொட்டில்களும்.
(நன்றி: "பிரதி" - சிற்றிதழ், ஜனவரி 1993.)