சுவையான சுறா புட்டு செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
சுறா மீன் - 1/2 கிலோ 
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 பொடியாக நறுக்கியது 
பூண்டு - பொடியாக நறுக்கியது 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
 
பின் நீரை வடிகட்டி மீன் துண்டுகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, தண்ணீரை பிழிந்து எடுத்து நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்