சுவையான மொகல் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா...?

தேவையான பொருட்கள்:
 
மட்டன் - 1 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய்- 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 

செய்முறை:
 
மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லி தூள் (தனியாத்தூள்) மற்றும் கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஊறவைத்துள்ள மட்டனை போட்டு 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் மிதமான தீயில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.
 
அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.
 
இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் காணப்படும். இந்த கிரேவியை போன்று இருப்பதை எடுத்து, குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும். மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்தவுடன், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கினால் சுவையான மொகல் பிரியாணி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்