ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:44 IST)
சுறா புட்டு என்றதும் உங்கள் அம்மாவின் ஞாபகம் வந்திருக்குமே. அவ்வளவு ருசியான சுறா புட்டை நமது அம்மாவை விட வேறு யாரால் செய்ய முடியும் என்று ஒரு மமதையே உண்டாகுமே... சரி அதே மமதை உங்களது மகன், மகளுக்கும் வர வேண்டும் அல்லவா... அப்போ வாங்க சுறா புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
சுறா - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
பூண்டு - 2 முழுதாக
இஞ்சி - பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 4
கொத்துமல்லி - 1 கட்டு
கறிவேப்பிள்ளை - 4 கீற்று
எண்ணெய் - 1 கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
சுறாவை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள், அரைப்பங்கு உப்பு சேர்த்து வேக விடவும். அதிகபட்சம் 5 நிமிடங்கள்தான்... அதற்குள் சுறா நன்கு வெந்து இருக்கும்.
அதனை இறக்கி துண்டுகளை தட்டில் ஆற வைத்து அதன் தோலை உரித்துவிட்டு சதைகளை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். அதிகமாக ஊற்றி விட வேண்டாம். புட்டு சொத சொத வென்று ஆகிவிடும்.
எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் ஒவ்வொன்றாக போடவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் சொறாவை கொட்டிக் கிளறவும்.
தற்போது பாதிப்பங்கு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.
சூடான, சுவையான சுறா புட்டு தயார்.
மிளகாய் கிள்ளிப்போட்டு வைக்கும் சாம்பார் சாதத்திற்கு இதை விட ஒரு சுவையான துணை உணவு வேறு இருக்குமா என்ன?
குறிப்பு : சுறாவை வேக வைப்பதில் மற்றுமொரு முறையும் உண்டு. அதாவது, மீன் கடையிலேயே சுறாவை சுத்தம் செய்து அதன் தோலை உரித்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வந்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் சுறா துண்டுகளைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் மட்டும் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
சுறா வேகும்போதே கரண்டியால் சுறாவை குத்தி உதிர்த்துவிட வேண்டும். சுறா நன்கு வெந்ததும் நாம் ஊற்றிய தண்ணீர் வற்றி போய் இருக்கும். அதனை அப்படியே எடுத்து ஆற வைத்து மேலும் உதிர்த்துக் கொள்ளலாம்.