விரதம் இருப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

திங்கள், 25 ஜூலை 2022 (09:44 IST)
விரதம் இருப்பதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒரு முறை விரதம் இருப்பதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும்.


ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத் தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது. மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம். விரதம் இருப்பவர்கள் அதை முறையாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

விரதம் இருக்கும் போது நீர்ச்சத்து உள்ள பானங்களை நிறைய எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் அப்படியே தங்கி நோய்களை ஏற்படுத்தும்.

விரதத்தின் போது குளுக்கோஸ் தண்ணீர், கிரீன் டீ, சூப் போன்றவையும் பருகலாம். கிரீன் டீ 'ஆன்டிஆக்ஸிடென்ட்' ஆகச் செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்யும்.

போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் கிடைக்க வழி செய்கிறது. முறையான விரதத்தில் 5 வகை காய்கறிகள், 5 வகை பழங்கள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரைமணி நேரம் நடைப்பயிற்சியோடு, 8 மணி நேர தூக்கமும் பெற்றால், உடல் புத்துணர்வு பெறும்.

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவுக்காரர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், நீண்ட நாட்களாக மருந்து உட்கொண்டு வருபவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் விரதம் இருக்கக் கூடாது.

காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துவிட்டு விரதத்தை முடிக்கும்போது பழச்சாறு அருந்தினாலும் பெரிய பயன் இருக்காது. மலச்சிக்கல், வயிற்றுப்புண், தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படக் கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்