ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக, மத்திய அரசுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணா விரதத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார்.அவரது உண்ணாவிரதம் தற்போது 7 வது நாளாக நீடிக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஆனால், உண்ணாவிரதம் உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு திடீர் என உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால், அவரது உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும், ஜெகனின் மனைவி பாரதியும் கேட்டுக் கொண்டனர். ஆனால், சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடமாட்டேன் என ஜெகன் அறிவித்துள்ளார். இதனால், ஜெகன் மோகன்ரெட்டியின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. கவலைக்கிடமாக உள்ளாதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.