நான் பிரிட்டிஷ் குடிமகன்: விஜய் மல்லையா

திங்கள், 25 ஏப்ரல் 2016 (14:32 IST)
பணமோசடி வழக்கில் சிக்கி, பிரிட்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, தான் 1992 ஆம் ஆண்டு முதல் ”பிரிட்டன் குடிமகன்” என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் உள்ள வங்கிகளில் 9,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, அந்த கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா மீது பணமோசடி வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில், மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டைப் பிறப்பித்து, அத்துடன் பாஸ்போர்ட்டை வெளியுறவு அமைச்சகம் முடக்கியது.
 
இதையடுத்து, பிரிட்டன், லேடிவாக்-ல் இருப்பது, தனது அதிகாரபூர்வ முகவரி என்றும், அதை இந்திய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாகவும் மல்லையா கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மல்லையாவின் பெயர் பிரிட்டன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், அந்த இதழில் மல்லையா, தான் 1992 ஆம் ஆண்டு முதல் "இங்கிலாந்து குடிமகன்” என்றும் கூறியுள்ளார்.
 
விஜய் மல்லையாவை, நாட்டிற்கு திரும்பக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. 
 
இன்டர்போல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று அமலாக்க பிரிவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்