’உங்கள என்ன பண்றேன் பாருங்க’! – போலீஸை பழிவாங்க வாலிபர் செய்த சம்பவம்!

செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:56 IST)
உத்தர பிரதேசத்தில் தன்னை தண்டித்த போலீஸாரை பழிவாங்க இளைஞர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் கோரக்பூரில் இருந்து பேசுவதாகவும், கோரக்நாத் கோவிலுக்குள் கேக் பார்சலில் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு 4 பேர் சென்றுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் உடனடியாக வெடிகுண்டு சோதனை கருவி, மோப்ப நாய் உதவியுடன் கோவிலில் போலீஸார் பலத்த சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போன் செய்து எச்சரித்த நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சொன்ன முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரது மொபைல் எண்ணை ட்ராக் செய்த போலீஸார் கோரக்பூர் அருகே கார்மல் ரோட்டில் வைத்து குர்பான் அலி என்ற அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த அந்த இளைஞர் கோரக்பூரில் உள்ள பேக்கரிகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். சமீபத்தில் பைக்கில் சென்ற குர்பான் அலியை பிடித்து போலீஸார் அபராதம் விதித்ததால் அதற்கு பழி வாங்குவதற்காக குர்பான் அலி மிரட்டல் போன் கால் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்