அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்திய ஆடை ஏற்றுமதி பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை ஆண்டு முழுவதும் நீடித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரி நேற்று இரவு முதலாக அமலுக்கு வந்த நிலையில் இந்தியாவின் பங்குச்சந்தைகள் பாதிப்பை வெளிக்காட்டும் விதமாக சரிந்துள்ளது. இந்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூர், சூரத், பனாரஸ் என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பருத்தி ஆடைகள் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான வரி காரணமாக ஏற்றுமதி நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு சென்றுவிட்டால் இந்திய ஜவுளித்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் இந்த இடர்பாடுகளை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை டிசம்பர் 31 வரை நீட்டித்து ஆண்டு முழுவதும் வரிகள் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இதனால் பருத்தி ஆடைகளின் உற்பத்தி செலவை குறைக்க முடிவதால், அவற்றை முடிந்தளவு அமெரிக்க வரி சேர்த்தாலும் குறைந்த விலையில் ஏற்றுமதியாளர்களுக்கு தருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K