ஜாதி-மத மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை

வியாழன், 29 ஜனவரி 2015 (13:56 IST)
ஜாதி-மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு உத்தரப் பிரதேச அரசு ரூ.50 ஆயிரம் வழங்குகிறது.
 
ஜாதி–மத பாகுபாடுகளை களைய உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஜாதி-மத திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருமணம் செய்த 8 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி மீரட்டில், காதலர்கள் தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் மாநில அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
 
உ.பி. அரசின் இந்த திட்டம் பற்றி மீரட் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, ''உத்தரப் பிரதேசம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீரட்டில் ஆட்சியர் அலுவலகத்தில் முதல் கட்டமாக 8 தம்பதி தலா ரூ.50 ஆயிரம் நிதி பெறுகிறார்கள். திருமணம் செய்யும் மணமக்களில் யாராவது ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கு வருமான உச்ச வரம்பு எதுவும் இல்லை.
 
தகுதியும், விருப்பமும் உள்ள தம்பதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் திருமண சான்றிதழை காட்டி பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர் விசாரணை நடத்தி, சரிபார்த்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையை அவர்கள் பெயருக்கு காசோலையாக வழங்குவார்கள்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்